விடுதலையாக மறுப்பு: அமுதசுரபி ஊழியர்கள் தர்ணா

அரசுத் துறைகளில் அமுதசுரபிக்கு வழங்கவேண்டிய பாக்கித்தொகை ரூ.12 கோடியை வசூலித்து ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக்கோரி அதில் பணியாற்றி வரும் ஊழியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2020-10-09 22:16 GMT
புதுச்சேரி,

புதுவை அரசு சார்பு நிறுவனமான அமுதசுரபியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த 9 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. அரசுத் துறைகளில் அமுதசுரபிக்கு வழங்கவேண்டிய பாக்கித்தொகை ரூ.12 கோடியை வசூலித்து ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக்கோரி அதில் பணியாற்றி வரும் ஊழியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கோரிக்கைகளுக்காக நேற்று முன்தினம் புதுவை சட்டசபையை அவர்கள் முற்றுகையிட்டனர். அவர்களை கைது செய்து அப்புறப்படுத்திய போலீசார் தீயணைப்பு நிலையம் அருகே உள்ள கரிக்குடோனில் தங்கவைத்தனர். மாலையில் அவர்களை விடுவித்தனர். ஆனால் விடுவிக்கப்பட்ட அமுதசுரபி ஊழியர்கள் அங்கிருந்து செல்ல மறுத்துவிட்டனர். நேற்று காலையிலும் தொடர்ந்து கரிக்குடோன் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். ஆனால் அதை ஏற்க மறுத்த அமுதசுரபி ஊழியர்கள் தொடர்ச்சியாக அங்கேயே முகாமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மீண்டும் போலீஸ் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்