திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு பானைகளை உடைத்து பொதுமக்கள் போராட்டம் - குடிநீர் வழங்கக்கோரி நடந்தது

திருவெண்ணெய்நல்லூரில் குடிநீர் வழங்கக்கோரி பேரூராட்சி அலுவலகம் முன்பு பானைகளை உடைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-10-09 22:45 GMT
அரசூர்,

திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட பாலாஜி நகர், கீழ் மேட்டுத்தெரு, காமராஜர் தெரு ஆகிய தெருக்களில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த சில நாட்களாக சரவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். தொடர்ந்து அலுவலகம் முன்பு தாங்கள் கொண்டு வந்த பானை, குடம் ஆகியவற்றை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார் பேரூராட்சி இளநிலை உதவியாளர் பாலமுருகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையேற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்