நெல்லையில் போலீஸ் துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

நெல்லை மாநகர பகுதி மக்களிடம் நேரடியாக புகார்களை பெறும் வகையில் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது.

Update: 2020-10-10 22:45 GMT
நெல்லை, 

தமிழகம் முழுவதும் பொதுமக்கள் போலீஸ் நிலையங்களில் கொடுத்துள்ள புகார்கள் மற்றும் போலீஸ் துறையால் கிடைக்கப் பெற வேண்டிய உதவிகள் போன்றவற்றுக்கு தீர்வு காணும் வகையில் போலீசாரே பொதுமக்கள் வீடுகள் தேடி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

அதன்படி நெல்லை புறநகர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவுப்படி போலீசார் வீடு வீடாக சென்று புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நெல்லை மாநகரில் போலீஸ் கமிஷனர் தீபக் டாமோர் உத்தரவுப்படி நேற்று 2 இடங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. பாளையங்கோட்டை, மேலப்பாளையம், பெருமாள்புரம், ஐகிரவுண்டு ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொதுமக்களுக்கான குறைதீர்க்கும் முகாம் தெற்கு பஜார் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு உதவி கமிஷனர் ஜான் பிரிட்டோ தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அவற்றை உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுத்தனர்.

இதேபோல் நெல்லை சந்திப்பு, டவுன், தச்சநல்லூர், பேட்டை ஆகிய போலீஸ் நிலையங்களின் எல்லைக்கு உட்பட்ட பொதுமக்களுக்கான குறை தீர்க்கும் முகாம் டவுன் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. போலீஸ் உதவி கமிஷனர் சதீஷ்குமார் தலைமையில் போலீசார் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் செய்திகள்