களக்காடு அருகே மூதாட்டியை ஏமாற்றி 30 பவுன் நகை மோசடி பூசாரிக்கு வலைவீச்சு

களக்காடு அருகே மூதாட்டியை ஏமாற்றி 30 பவுன் நகை மோசடி செய்த பூசாரியை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2020-10-11 23:22 GMT
களக்காடு,

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் சேதுராயபுரத்தை சேர்ந்தவர் செல்லப்பா மனைவி ரத்தினம் (வயது 73). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். அதே ஊரை சேர்ந்தவர் பரமசிவன் மகன் அருள்ராஜ் (27). இவர் அப்பகுதியில் அம்மன் கோவில் பூசாரியாக உள்ளார். ரத்தினம் அந்த கோவிலுக்கு அடிக்கடி செல்வார். இதனை வைத்து அருள்ராஜ், தனக்கு பண கஷ்டம் உள்ளது. தங்க நகைகளை தாருங்கள் என்று ரத்தினத்திடம் கூறி உள்ளார். இதனை நம்பிய ரத்தினம் தனக்குரிய 30 பவுன் தங்க நகைகளை கடந்த ஒரு மாதத்திற்கு முன் அவரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அருள்ராஜ் நகைகளை பெற்றுக் கொண்டு அதற்கு பதில் அவருக்கு கவரிங் நகைகளை கொடுத்துள்ளார்.

வலைவீச்சு

தனது தாயார் கவரிங் நகைகளை அணிந்துள்ளதை பார்த்த மகன்கள் விசாரித்தபோது அருள்ராஜ் ஏமாற்றி தங்கநகைகளுக்கு பதிலாக மோசடியாக கவரிங் நகைகள் கொடுத்தது தெரியவந்தது. இதுபற்றி ரத்தினம் களக்காடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் காளியப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அருள்ராஜை வலைவீசி தேடி வருகிறார்.

மேலும் இந்த நகை மோசடியில் வேறு எவருக்கும் தொடர்பு உள்ளதா? மேலும் நகைகள் திருடப்பட்டுள்ளதா? என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே அருள்ராஜ் மீது கடந்த 2017-ம் ஆண்டு இதுபோல ஒருவரிடம் ரூ.1½ லட்சம் ஏமாற்றி பறித்த வழக்கும் உள்ளது.

மேலும் செய்திகள்