கொரோனா வீட்டில் கொள்ளைபோன வழக்கில் மேலும் ஒருவர் கைது

சென்னை தியாகராயநகரில் கொரோனா வீட்டில் கொள்ளை போன சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். கொள்ளை போன நகைகளை தங்க கட்டிகளாக மும்பையில் போலீசார் மீட்டனர்.

Update: 2020-10-12 22:30 GMT
சென்னை, 

சென்னை தியாகராயநகர் சாரதாம்பாள் தெருவில் வசிப்பவர் நூருல் ஹக் (வயது 70). என்ஜினீயரான இவர் துபாயில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் நிர்வாக இயக்குனராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். மனைவியும் இவருடன் வாழ்ந்து வந்தார். கொரோனா பாதிப்பு இருந்ததால் வீட்டில் அனைவரும் தனிமைப்படுத்திக்கொண்டு வாழ்ந்தனர். இவர்களுடன் மொய்தீன் (29) மற்றும் முஸ்தபா என்ற உறவினர்களும் வசித்தனர்.

சமீபத்தில் இவர்களுடைய வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோ லாக்கரில் வைத்திருந்த 250 பவுன் தங்க நகைகள், ரூ.95 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள கைக்கடிகாரம் போன்றவற்றை கொள்ளை அடித்து சென்றனர்.

உறவினர் மொய்தீன்தான் இந்த வழக்கில் மூளையாக செயல்பட்டு கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியது தெரிய வந்தது. அவர் அழைத்து வந்த கொள்ளையர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான மொய்தீன் மும்பைக்கு தப்பி ஓடிவிட்டார். கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளை அவர் மும்பையில் உள்ள ஒரு அடகு கடையில் விற்று விட்டது தெரிய வந்தது. தனிப்படை போலீசார் மும்பை சென்று விசாரித்தனர்.

மொய்தீன் விற்ற நகைகளை அடகு கடைக்காரர் தங்க கட்டிகளாக உருக்கி விட்டதாக தெரிகிறது. அதை போலீசார் மீட்டனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த மேலும் ஒருவரை கைது செய்தனர். ஆனால் மொய்தீன் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்