கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 32 ஆயிரமாக உயர்வு: ஒரே நாளில் 6 பேர் பலி

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 32 ஆயிரமாக உயர்ந்து உள்ளது. கோவையில் நேற்று ஒரே நாளில் 6 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

Update: 2020-10-12 23:15 GMT
கோவை,

கோவை மாவட்டத்தில் இந்த மாதம் தொடக்கம் முதல் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.

அதே நேரத்தில் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கோவையில் நேற்று பீளமேடு, பொள்ளாச்சி, ஆர்.எஸ்.புரம், மேட்டுப்பாளையம், காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 393 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 511 ஆக உயர்ந்து உள்ளது.

மேலும் நேற்று ஒரே நாளில் 466 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன்மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 32,175 ஆக உயர்ந்து உள்ளது. தற்போது 4,839 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது பெண், 38 வயது ஆண், 73 வயது முதியவர், இ.எஸ்.ஐ. மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த 70 வயது மற்றும் 72 வயது முதியவர் ஆகிய 5 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதேபோல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 50 வயது ஆண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று 6 பேர் உயிரிழந்து உள்ளதால் கோவையில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 497 ஆக உயர்ந்தது.

மேலும் செய்திகள்