நொய்யல் ஆற்றில் மூழ்கி அண்ணன்-தம்பி பலி

அணைக்காடு பகுதியில் நொய்யல் ஆற்றின் தடுப்பணையில் 2 சிறுவர்களின் உடல் மிதப்பதாக தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் விரைந்து சென்று அந்த உடல்களை மீட்டு விசாரணை நடத்தினார்கள்.

Update: 2020-10-13 00:57 GMT
திருப்பூர்,

திருப்பூர் பெரிய தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பஷீர் அகமது (வயது 37) பெயிண்டர். இவரது மூத்த மகன் முகமது சமீர் (11), இளைய மகன் முகமது சாகிர் (7). இதில் முகமது சமீர் நொய்யல் வீதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பும், அதே பள்ளியில் முகமது சாகிர் 2-ம் வகுப்பும் படித்து வந்தனர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை விளையாட செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றனர். இரவு நீண்ட நேரமாகியும் சிறுவர்கள் இரண்டு பேரும் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் நேற்றுகாலை அணைக்காடு பகுதியில் நொய்யல் ஆற்றின் தடுப்பணையில் 2 சிறுவர்களின் உடல் மிதப்பதாக தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் விரைந்து சென்று அந்த உடல்களை மீட்டு விசாரணை நடத்தினார்கள். இதில் இருவரும் காணாமல் போன முகமது சமீர், அவனது தம்பி முகமது சாகிர் என்பது தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவர்கள் 2 பேரும் மீன்பிடிப்பதற்காக நொய்யல் தடுப்பணைக்கு சென்றபோது தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.

மேலும் செய்திகள்