ஒரே நாளில் முக கவசம் அணியாத 4,369 பேர் பிடிபட்டனர் ரூ.8¾ லட்சம் அபராதம் வசூல்

மும்பையில் ஒரே நாளில் முக கவசம் அணியாமல் நடமாடிய 4,369 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.8 லட்சத்து 73 ஆயிரம் அபராதம் வசூலாகி உள்ளது.

Update: 2020-10-13 21:20 GMT
மும்பை,

மும்பையில் இந்த மாத தொடக்கம் முதல் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதில் பலர் முககவசம் இன்றி பொது வெளியில் திரிவதால் தொற்று பாதிப்பு அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இதனால் முக கவசம் அணியாமல் செல்பவர்களை பிடிக்க ஒரு மாத காலத்துக்கு தீவிர சோதனை பணியை மேற்கொள்ள இருப்பதாக மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால் தெரிவித்து இருந்தார்.

மேலும் முகக்கவசம் இன்றி செல்பவர்களிடம் ரூ.200 அபராதம் வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்து இருந்தது.

4, 369 பேர் பிடிபட்டனர்

இந்தநிலையில் நேற்று மும்பை மாநகரில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதில் ஒரே நாளில் மட்டும் 4 ஆயிரத்து 369 பேர் முக கவசம் இன்றி நடமாடியதாக பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.8 லட்சத்து 73 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரையில் மாநகராட்சி சார்பில் 38 ஆயிரத்து 866 பேர் பிடிபட்டு இருப்பதாகவும், இவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 5 லட்சம் வரையில் அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்