லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: பொதுப்பணித்துறை உதவி இயக்குனர், இடைத்தரகர் மீது வழக்கு

ஈரோடு பொதுப்பணித்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக உதவி இயக்குனர், இடைத்தரகர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2020-10-14 20:47 GMT
ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் அமைக்கப்படும் கொதிகலன்களுக்கு (பாய்லர்) பொதுப்பணித்துறை கொதிகலன்கள் பிரிவு அதிகாரிகளிடம் அனுமதி பெறவேண்டும். இவ்வாறு அனுமதி பெறுவதற்கும், உரிமத்தை புதுப்பிக்கவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு பல்வேறு புகார்கள் சென்றன. இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் பொதுப்பணித்துறை முதுநிலை கொதிகலன்கள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை ஈரோடு லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு திவ்யா தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள்.

வழக்கு

இந்த சோதனையில் அலுவலகத்தில் இருந்த கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 61 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. மேலும், கொதிகலன் அமைப்பதற்கும், உரிமம் புதுப்பிக்கவும் அனுமதி கேட்டு தொழிற்சாலைகளில் இருந்து எத்தனை விண்ணப்பங்கள் பெறப்பட்டன? இதில் எத்தனை தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது போன்றவை குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

போலீசாரின் விசாரணையில், தொழிற்சாலை உரிமையாளர்களிடம் இருந்து லஞ்ச பணத்தை வாங்கிக்கொடுப்பதற்காக பவானி அருகே எலவமலை பகுதியை சேர்ந்த ராம்குமார் என்பவர் அலுவலகத்தில் இடைத்தரகராக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து உதவி இயக்குனர் மகேஷ் பாண்டியன் (வயது 50), இடைத்தரகர் ராம்குமார் (43) ஆகியோர் மீது ஈரோடு லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்