சேமிப்பு கணக்கில் பணம் மோசடி புகார்: கூட்டுறவு சங்க செயலாளர், கணக்காளர் பணி இடைநீக்கம்

கடையம் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பணம் மோசடி தொடர்பாக செயலாளர், கணக்காளர் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

Update: 2020-10-14 23:57 GMT
கடையம்,

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ரவணசமுத்திரத்தில் கோவிந்தப்பேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. இதில் சுமார் 900-க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கு சிறு சேமிப்பு, வைப்பு நிதி, நகைக்கடன், விவசாய கடன் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உறுப்பினர்கள் தமது கணக்கில் உள்ள சேமிப்பு பணத்தை கேட்டு சென்றபோது கணக்கில் பணம் இல்லை என்று சங்கத்தில் உள்ளவர்கள் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த உறுப்பினர்கள் இதுகுறித்து மற்ற உறுப்பினர்களிடமும் கூறியதை அடுத்து ஏராளமானவர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு வந்து தங்களது கணக்குகளை சரி பார்த்தனர்.

2 பேர் பணி இடைநீக்கம்

அப்போது பலரது கணக்குகளில் இருந்து லட்சக்கணக்கில் பணம் எடுக்கப்பட்டு மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. இதனால் உறுப்பினர்கள் இடையே பெரும் பீதி ஏற்பட்டது. இங்கு பல கோடி ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சேரன்மாதேவியில் உள்ள சரக கூட்டுறவு துறை அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டது. அதிகாரிகள் விசாரணையில் பணம் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்த நிலையில் அந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் ஷாஜகான், கணக்காளர் முத்துசெல்வி ஆகியோர் திடீரென பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மக்கள் பலர் நேற்று சங்கத்தின் முன்பு திரண்டனர். ஆனால், கதவு பூட்டப்பட்டு இருந்ததால் ஏமாற்றம் அடைந்தனர்.

நகை வைத்தும் மோசடி

மேலும் சேரன்மாதேவி சரக கூட்டுறவு துறை அதிகாரியிடமும், கடையம் போலீஸ் நிலையத்திலும் சங்கத்தலைவர் உச்சிமாகாளி மற்றும் உறுப்பினர்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதில், “இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் உறுப்பினர்களின் பணத்தை மோசடியாக எடுத்து தங்களது சொந்த செலவினங்களுக்கு பயன்படுத்தி உள்ளனர். மேலும் போலி நகைகளை உண்மையான தங்கநகை போல சில நபர்கள் பெயரில் வைத்து மோசடி செயலிலும் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்