ஜவ்வாதுமலை பீமன் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து மெக்கானிக் பலி - புகைப்படம் எடுத்தபோது விபரீதம்

ஜவ்வாதுமலையில் பீமன் நீர்வீழ்ச்சி அருகே நின்று புகைப்படம் எடுத்த மெக்கானிக் தவறி விழுந்து பலியானார்.

Update: 2020-10-15 10:30 GMT
ஜமுனாமரத்தூர்,

வேலூரை சேர்ந்தவர் காதிர். இவருடைய மகன் உஸ்மான் (வயது 22). சேத்துப்பட்டில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவர் மேல்மலையனூர் தாலுகா சங்கிலிகுப்பம் கிராமத்தை சேர்ந்த சையத்சர்தார் (21), ஷேக்சகில் (21), ஜான்பாஷா (18), செங்கம் தாலுகா நம்மியந்தல் பருதியை சேர்ந்த அஜித்குமார் (21) ஆகியோருடன் ஜவ்வாதுமலையில் உள்ள பீமன் நீர்வீழ்ச்சியை பார்க்க சென்றுள்ளார்.

அங்குள்ள வனத்துறை சோதனைச்சாவடியில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் திரும்பிய அவர்கள் மோட்டார்சைக்கிளை ஒரு பகுதியில் நிறுத்திவிட்டு காட்டுப்பாதையாக நடந்து பீமன் நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளனர். அங்கு பீமன் நீர்வீழ்ச்சியின் மேல்பகுதியில் உஸ்மான் நின்றுகொண்டு புகைப்படம் எடுத்துள்ளார்.

அப்போது அவர் கால் தவறி நீர்வீழ்ச்சியில் விழுந்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய நண்பர்கள் கூச்சலிட்டனர். இதை கேட்டு அந்தப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் அங்குவந்தனர். அவர்கள் ஜமுனாமரத்தூர் போலீஸ் நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து உஸ்மானை மீட்டு ஜமுனாமரத்தூர் ஆரம்பசுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டார்.

இதுகுறித்து ஜமுனாமரத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்