மராட்டியத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 85 சதவீதம் பேர் குணமடைந்தனர்

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 85 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர்.

Update: 2020-10-15 21:33 GMT
மும்பை,

மராட்டியத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் 10 ஆயிரத்து 226 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் இதுவரை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 லட்சத்து 64 ஆயிரத்து 615 ஆக அதிகரித்து உள்ளது.

இதில் 13 லட்சத்து 30 ஆயிரத்து 483 பேர் குணமடைந்து உள்ளனர். அதாவது நோய் பாதித்தவர்களில் 85.04 சதவீதம் பேர் குணமாகி இருக்கிறார்கள். நேற்று மட்டும் மாநிலம் முழுவதும் 13 ஆயிரத்து 714 போ் குணமாகி ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி உள்ளனர்.

2 லட்சத்தை விட குறைந்தது

மாநிலத்தில் புதிதாக ஆட்கொல்லி நோய்க்கு 337 பேர் பலியாகி உள்ளனர். இதனால் மராட்டியத்தில் இதுவரை தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 196 ஆக உயர்ந்து உள்ளது.

மாநிலம் முழுவதும் இதுவரை 79 லட்சத்து 14 ஆயிரத்து 651 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 19.77 சதவீதம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 92 ஆயிரத்து 459 பேர் மட்டுமே நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு மாநிலத்தில் தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை விட குறைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

மும்பை

மும்பையில் நகரில் நேற்று 2 ஆயிரத்து 119 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 36 ஆயிரத்து 721 ஆக உயர்ந்து உள்ளது.

இதேபோல நகரில் புதிதாக 46 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர்.

மேலும் செய்திகள்