அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு: சட்டசபை நோக்கி பார்வையற்றோர் ஊர்வலம்

புதுச்சேரி பார்வையற்றோர் உரிமைக்குரல் இயக்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்பன் கலையரங்கம் அருகே இருந்து சட்டசபை நோக்கி நேற்று ஊர்வலமாக சென்றனர்.

Update: 2020-10-15 22:43 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி பார்வையற்றோர் உரிமைக்குரல் இயக்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்பன் கலையரங்கம் அருகே இருந்து சட்டசபை நோக்கி நேற்று ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்திற்கு இயக்கத்தின் தலைவர் மாயவன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஆறுமுகம், துணைத்தலைவர் சஞ்சீவிராயன், துணைச் செயலாளர் அனந்தராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊர்வலம் அண்ணாசாலை, நேருவீதி, மிஷன்வீதி வழியாக மாதா கோவில் வீதியை அடைந்தது. அங்கு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனை தொடர்ந்து அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பார்வையற்றோருக்கு அரசு வேலைவாய்ப்பில் 1 சதவீத இடஒதுக்கீடு வழங்கி அரசு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதுவையில் உள்ள அனைத்து தனியார் கல்லூரிகளில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச கல்வி வழங்க அரசாணை வெளியிட வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டிய 37 மாத நிலுவை அரிசிக்கான தொகையை வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்