திருவண்ணாமலையில், ஒப்பந்ததாரர் வீட்டில் நகை, பணம் திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

திருவண்ணாமலையில் ஒப்பந்ததாரர் வீட்டில் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2020-10-16 10:45 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை நல்லவன் பாளையத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவர் பொதுப் பணித்துறை ஒப்பந்ததாரர் ஆவார். இவர் தனது குடும்பத்துடன் கடந்த 8-ந் தேதி ஆதமங்கலம் புதூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் கலைந்து கிடந்தது.

மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.2 லட்சம், 4 பவுன் நகை, ¼ கிலோ வெள்ளி பொருட்கள் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அன்பழகன் திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்