உயர்கோபுர மின் விளக்குகளை சீரமைக்கக் கோரி பா.ஜ.க. நூதன போராட்டம்

பழுதடைந்த உயர்கோபுர மின் விளக்குகளை சீரமைக்கக்கோரி பாரதீய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது.

Update: 2020-10-16 22:14 GMT
திருபுவனை,

புதுச்சேரி - விழுப்புரம் நெடுஞ்சாலையில் திருபுவனை மற்றும் திருவண்டார்கோவில் பஸ் நிறுத்ததில் உள்ள உயர் கோபுர மின்விளக்குகள் கடந்த பல மாதங்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் அந்த பகுதி இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இது குற்றச்சம்பவங்கள் நடைபெற வாய்ப்பாக உள்ளது. எனவே பழுதடைந்த உயர்கோபுர மின் விளக்குகளை சீரமைக்கக்கோரி பாரதீய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது.

திருபுவனை- கடலூர் சாலையில் வில்லியனூர் மாவட்ட விவசாய அணி செயலாளர் சுதா தலைமையில் திரண்ட பா.ஜ.க. நிர்வாகிகள் அங்கிருந்து ஊர்வலமாக வந்து திருபுவனை உயர்கோபுர மின்விளக்குக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக திருவண்டார்கோவில் சென்று, அங்குள்ள மின்விளக்குக்கு மலர்வளையம் வைத்தனர்.

இந்த நூதன போராட்டத்தில் விவசாய அணி தலைவர் புகழேந்தி, வில்லியனூர் மாவட்ட தலைவர் ஆனந்தன், பொதுச்செயலாளர் கருணாகரன், திருபுவனை தொகுதி தலைவர் முருகன் மற்றும் நிர்வாகிகள் செல்லிப்பட்டு தனசேகரன், சுரேஷ், நாராயணசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்