நெல்லை அருகே மேம்பாலத்தில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை

நெல்லை அருகே மேம்பாலத்தில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-10-16 23:31 GMT
நெல்லை,

நெல்லையில் இருந்து மதுரைக்கு செல்லும் 4 வழிச்சாலையில் கங்கைகொண்டான் பகுதியில் ஒரு மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் பக்கவாட்டு தடுப்பு சுவரில் நேற்று ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைக்கண்ட அந்த பகுதி மக்கள் கங்கைகொண்டான் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், போலீசார் அங்கு விரைந்து வந்து, தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தவரின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடலை, பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

காரணம் என்ன?

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர், முன்னீர்பள்ளம் அருகே உள்ள அடைமிதிப்பான்குளத்தை சேர்ந்த தொழிலாளி சுப்பிரமணியன் என்பது தெரியவந்தது. அவர் கடந்த சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய அவர், அதன்பிறகு திரும்பி வரவில்லை. இந்த நிலையில் அவர் மேம்பாலத்தில் கயிற்றை கட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியனின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்