சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கையை அரசு ஏற்க வேண்டும் சித்தராமையா வலியுறுத்தல்

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கையை அரசு ஏற்க வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.

Update: 2020-10-18 21:19 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நடத்தியுள்ள சமூக, பொருளாதார அதாவது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. அந்த இந்த அறிக்கையை மாநில அரசு ஏற்று, அதை அமல்படுத்த வேண்டும். இதற்கான பொறுப்பை மந்திரி ஈசுவரப்பா ஏற்றுள்ளார். அதனால் இந்த விஷயத்தில் போராட்டம் நடத்த வேண்டிய நிலை இருக்காது என்று நான் கருதுகிறேன். இது தொடர்பாக முதல்-மந்திரியை நேரில் சந்தித்து பேச உள்ளோம்.

இந்த சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கையை அமல்படுத்தினால் அனைத்து சாதியினருக்கும் அது பயனுள்ளதாக இருக்கும். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது தான் இந்த சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது பணி முழுமையாக நிறைவடையவில்லை. அதனால் அப்போது அதை செயல்படுத்த முடியவில்லை. குருப சமூகம் மட்டுமின்றி பழங்குடியின குண நலன்களை கொண்டுள்ள அனைத்து சாதிகளையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது எனது கருத்து.

இட ஒதுக்கீடு

வால்மீகி சமூக மக்களின் கோரிக்கையான இட ஒதுக்கீட்டை 7.5 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பது நியாயமானது. சமூகத்தில் அனைத்து சாதிகளுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப கல்வி, பொருளாதாரம், அரசியலில் இட ஒதுக்கீடு வழங்கினால் சமூகநீதி முழுமையாக ஏற்படும். இது தான் எங்களின் கோரிக்கை.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்