ஏக்நாத் கட்சே பா.ஜனதாவில் தான் உள்ளார் சந்திரகாந்த் பாட்டீல் திட்டவட்டம்

ஏக்நாத் கட்சே பா.ஜனதாவில் தான் உள்ளார் என மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியுள்ளார்.

Update: 2020-10-19 21:16 GMT
மும்பை,

மராட்டியத்தில் கடந்த பா.ஜனதா ஆட்சியின் போது மந்திரியாக இருந்தவர் ஏக்நாத் கட்சே. மூத்த தலைவரான இவர், ஊழல் புகாரில் சிக்கி மந்திரி பதவியை இழந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்தநிலையில் அவர் பா.ஜனதாவில் இருந்து விலகி தேசியவாத காங்கிரசில் சேர்ந்துவிட்டதாக தகவல்கள் பரவி வருகிறது.

மாநில தலைவர் மறுப்பு

இந்த தகவலை பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் மறுத்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “எங்கள் மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே பா.ஜனதாவில் தான் உள்ளார் என்பதை உறுதியாக கூறுகிறேன். யாராவது கட்சியில் இருந்து விலகினால் மாநில தலைவரான என்னிடம் தான் ராஜினாமா கடிதத்தை கொடுப்பார்கள். கட்சியின் மூத்த, இளைய தலைவர்கள் யாரிடம் இருந்தும் இதுவரை எந்த ராஜினாமா கடிதமும் வரவில்லை” எனறார்.

இதேபோல பா.ஜனதாவில் இருந்து விலகியதாக வெளியான தகவலை ஏக்நாத் கட்சேவும் மறுத்து உள்ளார்.

மேலும் செய்திகள்