நெல்லை, தூத்துக்குடியில் இலங்கை ரவுடிகள் பதுங்கலா? அகதிகள் முகாமில் உளவுப்பிரிவு போலீசார் அதிரடி விசாரணை

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அகதிகள் முகாமில் இலங்கை ரவுடிகள் பதுங்கி இருக்கிறார்களா? என்று உளவுப்பிரிவு போலீசார் அதிரடி விசாரணை நடத்தினார்கள்.

Update: 2020-10-20 16:35 GMT
தூத்துக்குடி,

இலங்கையில் கொலை மற்றும் போதை பொருள் கடத்தல் போன்ற பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட அங்கொட லொக்கா என்பவர் தமிழகத்தில் தலைமறைவாக இருந்து வந்தார். அவர் கடந்த ஜூலை மாதம் கோவையில் மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இலங்கையை சேர்ந்த சுமார் 10 பிரபல ரவுடிகள் தமிழகத்தில் பதுங்கி இருப்பதாக சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல் போலீஸ் எச்சரிக்கை விடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

அகதிகள் முகாம்

இதனால் தமிழகம் முழுவதும் கியூ பிரிவு போலீசார் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்திலும் உளவுப்பிரிவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 3 இடங்களில் அகதிகள் முகாம் இயங்கி வருகிறது.

இதில் தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி ராம்தாஸ் நகரில் 157 அகதிகளும், குளத்துவாய்ப்பட்டியில் 104 அகதிகளும், தாப்பாத்தியில் 1,292 அகதிகளும் தங்கி உள்ளனர். இவர்கள் பல்வேறு வேலைக்கும் சென்று வருகின்றனர். இந்த அகதிகள் முகாம்களில் உளவுப்பிரிவு போலீசார் அதிரடி விசாரணை நடத்தினர். அப்போது, முகாமில் கூடுதலாக யாரேனும் தங்கி உள்ளார்களா, முகாமில் உள்ளவர்கள் வெளியில் சென்று உள்ளார்களா, சந்தேகப்படும்படியாக ஆட்கள் நடமாட்டம் உள்ளதா? என்றும் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் கொரோனா ஊரடங்கின் போது, தூத்துக்குடிக்கு வந்து விசா முடிவடைந்த நிலையில் தங்கி உள்ள இலங்கையை சேர்ந்த சிலரையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

நெல்லை மாவட்டம்

இதேபோல் நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை பெருமாள்புரம், சுப்பிரமணியபுரம், கங்கைகொண்டான், சமூக ரெங்கபுரம், அம்பை ஆகிய 5 இடங்களில் இலங்கை அகதிகள் முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் சுமார் 1,800-க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த அகதிகள் முகாம்களிலும் உளவுப்பிரிவு போலீசார் அதிரடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்