கோபி அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

கோபி அருகே மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலியானார்.

Update: 2020-10-20 19:40 GMT
கடத்தூர்,

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொளப்பலூா் குமரன் காலனியை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (வயது 43). கூலி தொழிலாளி. இந்தநிலையில் நேற்று ராஜீவ்காந்தியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் செல்வம் என்பவரின் வீட்டில் மின்விளக்கு ஒளிரவில்லை.

அதை சரிசெய்வதற்காக ராஜீவ்காந்தி அங்கு சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றார்கள்.

விசாரணை

ஆனால் செல்லும் வழியிலேயே ராஜீவ்காந்தி இறந்துவிட்டார். இது பற்றி தகவல் கிடைத்ததும் சிறுவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றினார்கள். பின்னர் பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்கள். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மின்சாரம் தாக்கி பலியான ராஜீவ்காந்திக்கு கஸ்தூரி (24) என்ற மனைவியும், ரேணுகா (4) என்ற மகளும், விஜய் (1) என்ற மகனும் உள்ளனர்.

மேலும் செய்திகள்