கடலூரில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கடலூரில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-10-21 15:10 GMT
கடலூர்,

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களின் பணித்தன்மை மற்றும் பணிப்பளு ஆகியவற்றை பரிசீலனை செய்து, அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும். கொரோனா தடுப்பு பணியின் போது விபத்தில் உயிரிழந்த 3 வருவாய்த்துறை அலுவலர்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரணத்தொகையை காலதாமதமின்றி வழங்க வேண்டும் என்பன உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன், ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் காசிநாதன், அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், வருவாய்த்துறை மத்திய செயற்குழு உறுப்பினர் ரத்தினகுமரன், மாவட்ட துணை தலைவர் ராஜேஷ்பாபு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் மாவட்ட இணை செயலாளர் சிவக்குமார், மத்திய செயற்குழு உறுப்பினர் ராஜா உள்பட வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முடிவில் மாவட்ட பொருளாளர் ஜான்பிரிட்டோ நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்