சயான்-தாராவி சாலையில் லாரி மீது கார் மோதி என்ஜினீயர் பலி 3 பேர் காயம்

சயான்-தாராவி சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் என்ஜினீயர் பலியானார். 3 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2020-10-21 21:36 GMT
மும்பை,

மும்பை தாராவி காலாகில்லா சவுக்கி பகுதியை சேர்ந்தவர் விபுல் அகவானே(வயது22). தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது நண்பர்களான சவுரப் கோரே(22), சேத்தன் தோரட்(22), ராகுல் கர்னாடே(30) ஆகியோருடன் காரில் நேற்று முன்தினம் போய்வாடாவில் வசிக்கும் நண்பரை சந்திக்க சென்றனர்.

இதன்பின்னர் நள்ளிரவு 2 மணி அளவில் சயான்-தாராவி சாலை வழியாக வந்து கொண்டிருந்தனர். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இவர்களது கார் சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

பலி

இந்த விபத்தில் விபுல் அகாவானே சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 3 பேரும் காயமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பலியான விபுல் அகாவானேவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்