மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்: வாலிபர் பலி; சிறுமி படுகாயம் - திருவையாறு அருகே பரிதாபம்

திருவையாறு அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். அவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற சிறுமி படுகாயமடைந்தார்.

Update: 2020-10-21 22:45 GMT
திருவையாறு,

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள கஸ்தூரிபாய் நகரை சேர்ந்தவர் மாதவன். இவருடைய மகன் சிவா(வயது24). கூலித்தொழிலாளியான சிவா நேற்று மதியம் மோட்டார் சைக்கிளில் தனது சித்தப்பா இளையராஜாவின் மகள் இனிசியாவுடன்(8) திருவையாறில் உள்ள ரேஷன் கடைக்கு சென்றார். ரேஷன் கடையில் மண்எண்ணெய் வாங்கி கொண்டு கஸ்தூரிபாய் நகருக்கு மெயின்ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அய்யனார்குளம் அருகே சிவா சென்ற போது முன்னாள் சென்ற லாரியை முந்தி செல்ல முயற்சித்தார். அப்போது எதிரே மற்றொரு லாரி வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிவா தனது மோட்டார் சைக்கிளை இடது புறமாக ஒதுக்கிய போது ஏற்கனவே சென்று கொண்டிருந்த லாரியின் பின்புற சக்கரத்தில் மோட்டார் சைக்கிளுடன் சிக்கினார்.

இதில் படுகாயமடைந்த சிவா சம்பவ இடத்திலேயே இறந்தார். அவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற இனிசியா படுகாயமடைந்தார். உடனே சம்பவ இடத்துக்கு வந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் திருவையாறு போலீசார், சிவா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் இருந்து இனிசியா மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள். இது குறித்து திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் உயிரிழந்த சிவாவுக்கு ரம்யா என்ற மனைவியும், 1½ வயதில் பர்வேஸ்ராம் என்ற மகனும் உள்ளனர்.

மேலும் செய்திகள்