செல்போன் கோபுரத்தில் ஏறி ரூ.48 லட்சம் பொருட்கள் திருட்டு - 3 பேர் கைது

செல்போன் கோபுரத்தில் ஏறி ரூ.48 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-10-22 06:00 GMT
காரையூர்,

புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே உள்ள மறவாமதுரையில் தனியார் செல்போன் கோபுரம் உள்ளது. இந்த செல்போன் கோபுரம் தற்போது செயல்படாமல் உள்ளது. இந்தநிலையில் இந்த செல்போன் கோபுரத்தில், மூலங்குடியை சேர்ந்த கருப்பையா(வயது 25), சேலம் காளிப்பட்டியை சேர்ந்த செந்தில் (35), மறவாமதுரையை சேர்ந்த கணேசகுமார்(28) ஆகிய 3 பேரும் ஏறி அதில் இருந்த விலை உயர்ந்த பொருட்களை திருடி ஒரு லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து விட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், காரையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலையரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 பேரையும் மடக்கி பிடித்தனர்.

அவர்கள் திருடிய பொருட்கள் மற்றும் லாரி, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களின் திருடிய பொருட்களின் மதிப்பு ரூ.48 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்