ஆதனக்கோட்டையில் காணாமல் போன கல்லூரி மாணவி கிணற்றில் பிணமாக கிடந்தார்

ஆதனக்கோட்டையில் காணாமல் போன கல்லூரி மாணவி கிணற்றில் பிணமாக கிடந்தார்.

Update: 2020-10-22 06:15 GMT
ஆதனக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை திருவள்ளுவர் நகரில் வசித்து வருபவர் நடராஜன். விவசாய கூலித் தொழிலாளி. இவருடைய மூத்த மகள் மாலினி (வயது 19). இவர், கந்தர்வகோட்டை அருகே புனல்குளத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவி மாயமானார். இதுகுறித்து ஆதனக்கோட்டை போலீசில் நடராஜன் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வந்தனர்.

இந்தநிலையில், நேற்று மதியம் திருவள்ளுவர் நகர் அருகே உள்ள விவசாய கிணற்றில் மாலினி பிணமாக மிதந்தார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின்பேரில், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், தீயணைப்பு வீரர்கள் கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கி மாணவியின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர், மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து ஆதனக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்