மாவட்டத்தில், மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு - ஒரே நாளில் 20 பேருக்கு தொற்று

கரூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 20 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2020-10-22 06:15 GMT
கரூர்,

தமிழகத்தில் பல்வேறு ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு மக்களும், இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டனர். கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை கோவில்கள், டீக்கடை, ஓட்டல்கள், ஜவுளி கடைகள், நகை கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்தும் செயல்பட்டு வருகின்றன.

மக்களும் அனைத்து இடங்களுக்கு செல்லும்போது முககவசம், சானிடைசர் ஆகியவற்றை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக 10-க்கும் குறைவான எண்ணிக்கையிலேயே கொரோனா பாதிப்பு இருந்தது. நேற்று முன்தினம் 4 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென நேற்று மீண்டும் அதிகரித்து உள்ளது.

இதன்படி நேற்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில், கரூர் மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கரூர் மணவாடியை சேர்ந்த 58 வயது ஆண், தோகைமலையை சேர்ந்த 46 வயது பெண், கடவூரை சேர்ந்த 22 வயது பெண், குளித்தலையை சேர்ந்த 20 வயது பெண், லட்சுமிபுரத்தை சேர்ந்த 48 வயது ஆண், வாங்கலை சேர்ந்த 71 வயது மூதாட்டி, பள்ளப்பட்டியை சேர்ந்த 55 வயது ஆண்.

தாந்தோன்றிமலையை சேர்ந்த 73 வயது முதியவர், ராமானுஜம்நகரை சேர்ந்த 64 வயது முதியவர், காந்திகிராமத்தை சேர்ந்த 53 வயது ஆண், 25 வயது வாலிபர், பாரதியார் தெருவை சேர்ந்த 44 வயது பெண், முத்துநகரை சேர்ந்த 47 வயது ஆண், வடிவேல்நகரை சேர்ந்த 47 வயது ஆண், புதுப்பாளையத்தை சேர்ந்த 54 வயது ஆண் உள்பட 20 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்