வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வட கர்நாடகத்திற்கு ரூ.243 கோடி நிவாரண நிதி ஒதுக்கீடு மந்திரி பேட்டி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடகர்நாடகத்தில் நிவாரண பணிகளுக்கு ரூ.243 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாக வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் கூறினார்.

Update: 2020-10-22 22:53 GMT
பெங்களூரு, 

வட கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

கனமழையால் வடகர்நாடகம் பாதிப்பு

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் யாதகிரி, ராய்ச்சூர், கலபுரகி, விஜயாப்புரா உள்பட வடகர்நாடக மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பீமா, கிருஷ்ணா ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

இந்த நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நேற்று முன்தினம் முதல்-மந்திரி எடியூரப்பா ஹெலிகாப்டரில் பறந்து சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் நிவாரண பணிகளை முடுக்கிவிடும் படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இந்த நிலையில் வடகர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

2 ஹெலிகாப்டர்கள்

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகத்தில் அதிக மழை பெய்துள்ளது. கர்நாடகத்தில் இயல்பை விட கூடுதலாக 245 சதவீதம் மழை பெய்துள்ளது. கர்நாடகத்தின் உள்பகுதியில் 331 சதவீதமும், கடலோர பகுதிகளில் 435 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. அதிக மழையால் கிருஷ்ணா மற்றும் பீமா ஆறுகளில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கலபுரகி, விஜயாப்புரா, ராய்ச்சூர், யாதகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 14 தாலுகாக்களில் 247 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 136 கிராமங்களை சேர்ந்த 43 ஆயிரத்து 158 பேர் மீட்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய 5,016 பேர் மீட்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு உள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 12 குழுக்கள் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் தங்கி மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. மீட்பு பணிகளுக்காக 2 ஹெலிகாப்டர்கள் பீதர் விமான நிலையத்தில் தயாராக நிறுத்தப்பட்டுள்ளன.

அனைவருக்கும் முகக்கவசம்

14 படகுகள் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் தற்போது 233 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 38 ஆயிரத்து 676 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த மக்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கப்படுகிறது. நிவாரண முகாம்களில் கொரோனா பரவாமல் தடுக்க சானிடைசர் கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டு உள்ளது. அனைவருக்கும் முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளது.

நடப்பு மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் 10 பேர் மரணம் அடைந்துள்ளனர். 993 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 12 ஆயிரத்து 700 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 6.3 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி நாசம் அடைந்துள்ளன. கடந்த ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் வீடுகளை இழந்த 13 ஆயிரத்து 533 பேருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.35.48 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ரூ.243 கோடி நிதி

வெள்ளத்தால் பாதிப்படைந்த 16 ஆயிரத்து 75 குடும்பங்களுக்கு வீட்டு உபயோக பொருட்கள் வாங்க முதல் கட்டமாக தலா ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 12 ஆயிரத்து 113 குடும்பங்களுக்கு அந்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. பயிர் சேதம் அடைந்த 51 ஆயிரம் விவசாயிகளுக் ரூ.36.58 கோடி வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர்களின் வங்கி கணக்கில் ரூ.666 கோடி நிதி கையிருப்பு உள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விஜயாப்புரா, பீதர் மாவட்டங்களுக்கு தலா ரூ.10 கோடி, கலபுரகிக்கு ரூ.20 கோடி, யாதகிரிக்கு ரூ.15 கோடி, ராய்ச்சூருக்கு ரூ.5 கோடி என மொத்தம் ரூ.60 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வெள்ள நிவாரண பணிகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.183 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வெள்ள நிவாரண பணிக்கு மொத்தம் ரூ.243 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் மதிப்பீடு செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். அதன் பிறகு நிவாரண உதவி கேட்டு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்படும்.

இவ்வாறு மந்திரி ஆர்.அசோக் கூறினார்.

மேலும் செய்திகள்