அவினாசி அருகே பாறைக்குழியில் மூழ்கி அண்ணன்-தம்பி பலி குளிக்க சென்றபோது பரிதாபம்

அவினாசி அருகே குளிக்க சென்ற போது பாறைக்குழி தண்ணீரில் மூழ்கி அண்ணன்-தம்பி பலியானார்கள்.

Update: 2020-10-23 10:58 GMT
அவினாசி,

சென்னை சேப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 36). இவர் சென்னையில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி கஸ்தூரி (32). இவர்களுக்கு அயனேஸ்வரன் (10), பாலன் (9) என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். அங்குள்ள ஒரு பள்ளியில் அயனேஸ்வரன் 5-ம் வகுப்பும், பாலன் 3-ம் வகுப்பும் படித்து வந்துள்ளனர்.

கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கணவரை விட்டு பிரிந்த, கஸ்தூரி தனது மகன்களுடன் திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த பெரியாயிபாளையத்திற்கு வந்தார். பின்னர் அங்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார்.

இந்த நிலையில் கடந்த 4 நாட்களாகத்தான் கஸ்தூரி திருப்பூர் குமார் நகரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலைக்கு சென்றுவருகிறார். அதே போல் நேற்று முன்தினம் காலையில் 2 மகன்களையும் வீட்டில் விட்டுவிட்டு வழக்கம்போல் வேலைக்கு கஸ்தூரி சென்றுவிட்டார். பின்னர் இரவு 8.30 மணிக்கு வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது தனது மகன்கள் வீட்டில் இல்லை.

எனவே அக்கம்பக்கத்தில் விசாரித்து தேடிப் பார்த்தார். அப்போது மகன்கள் 2 பேரும், அப்பகுதியை சேர்ந்த மற்றொரு சிறுவனுடன் பெரியாயிபாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழிக்கு குளிக்க சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் துணையுடன் அங்குள்ள பாறைக்குழிக்கு சென்று கஸ்தூரி தேடினார். அப்போது பாறைக்குழி அருகில் தனது மகன்கள் அணியும் கால்சட்டை, மேல்சட்டை மற்றும் அவர்கள் அணிந்து இருந்த செருப்பு ஆகியவை கிடந்தன.

இதனால் பாறைக்குழிக்குள் மூழ்கியிருப்பார்களோ? என்ற அச்சம் கஸ்தூரிக்கு ஏற்பட்டது. இது குறித்து அவினாசி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அவினாசி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அங்கு வந்தனர். தீயணைப்பு வீரர்கள் பாறைக்குழி தண்ணீருக்குள் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது நள்ளிரவு 11 மணிக்கு இறந்த நிலையில் அயனேஸ்வரன் உடல் தண்ணீருக்குள் இருந்து வெளியே மீட்கப்பட்டது. அதன்பின்னர் பாலனை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் நேற்று காலையில் தீயணைப்பு படை வீரர்கள், பாலனை தேடும் பணியை மேற்கொண்டனர். அப்போது இறந்த நிலையில் பாலன் உடலும் தண்ணீருக்குள் இருந்து மீட்கப்பட்டது. சிறுவர்களின் உடல்களை பார்த்து கஸ்தூரி கதறி அழுதார். இந்த சம்பவம் பார்ப்போரை கண்கலங்க வைத்தது.

இதையடுத்து சிறுவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக அவினாசி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். இது குறித்து அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அண்ணன், தம்பி இருவரும் பாறைக்குழி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரியாயிபாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழியில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெறுகிறது. இது போன்ற உயிரிழப்புகள் இனிமேல் நடக்காமல் இருக்க அந்த பாறைக்குழியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்