நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர் 28-ந் தேதி முதல் பயன்பாட்டுக்கு வருகிறது

நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட உள்ளது. இது வருகிற 28-ந் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2020-10-23 15:37 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், ‘நெகட்டிவ்’ வந்த சிலர் நுரையீரல் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறப்பதும் ஆங்காங்கே நடந்து வருகிறது. இவர்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தற்போது 91 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் 48 பேருக்கு ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தினசரி சுமார் 7 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் செலவழிக்கப்பட்டு வருகிறது. இவை 100 சிலிண்டர்களில் நிரப்பப்பட்டு ஆங்காங்கே இருந்து அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்படுகின்றன. இதில் பல்வேறு சிரமங்கள் இருந்து வருகிறது. இதை தவிர்க்க அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மெகா ஆக்சிஜன் சிலிண்டர் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர் நேற்று லாரியில் கொண்டு வரப்பட்டு ஆஸ்பத்திரி வளாகத்தில் இறக்கி வைக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து ஆஸ்பத்திரி டீன் சாந்தா அருள்மொழி கூறியதாவது:-

நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் இதுவரை 920 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தற்போது 91 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 59 பேருக்கு மட்டுமே தொற்று உள்ளது. மீதமுள்ள நபர்களுக்கு ‘நெகட்டிவ்’ வந்தாலும் நுரையீரல் பாதிப்பு இருந்து வருகிறது. எனவே அவர்களுக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி ஆக்சிஜன் கிடைக்க 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சிலிண்டர் பொருத்தப்பட உள்ளது. இது வருகிற 28-ந் தேதி பயன்பாட்டுக்கு வரும்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் ‘நெகட்டிவ்’ என வந்தாலும் மூச்சு திணறல் உள்ளிட்ட ஏதேனும் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். அவ்வாறு சிகிச்சை எடுத்து கொள்ளாமல் அலட்சியமாக இருக்கும் சிலர் இறக்க நேரிடுகிறது. எனவே அலட்சியம் இல்லாமல் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்