காதலியை திருமணம் செய்து வைக்காததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

வடவள்ளியில் காதலியை திருமணம் செய்து வைக்காததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.

Update: 2020-10-23 17:45 GMT
வடவள்ளி,

கோவை வடவள்ளியில் உள்ள கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மகன் மாணிக்கம் (வயது 21). இவர் தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. படித்து வந்தார். இந்த நிலையில் கொரோனாஊரடங்கால் கல்லூரி திறக்கப்படாததால் அதே பகுதியில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார்.

மாணிக்கம், அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் மாணவியின் வீட்டில் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர். இதனை அறிந்த மாணிக்கம், மாணவியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் பெண் வீட்டார், இதற்கு மறுத்துவிட்டதாக தெரிகிறது.

இதனால் மாணிக்கம் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வடவள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது கல்லூரி மாணவர் எழுதிய கடிதம் சிக்கியது. இதில் தன்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதப்பட்டிருந்தது. இந்த சம்பவம் குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்