பலத்த மழையால் வீடு இடிந்து விழுந்து கணவன்-மனைவி காயம்

பலத்த மழை காரணமாக புழல் அருகே வீடு இடிந்து விழுந்து கணவன்-மனைவி காயம் அடைந்தனர்.

Update: 2020-10-23 23:22 GMT
செங்குன்றம், 

சென்னையை அடுத்த புழல் என்.எஸ்.கே. தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 63). இவருடைய மனைவி செல்வி (60). இவர்கள் இருவரும் பழைய ஓட்டு வீட்டில் வசித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் மாலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் அவர்களது வீட்டின் மண் சுவர்கள் நனைந்து ஈரமாக இருந்தது. இதனால் இரவில் கணவன்-மனைவி இருவரும் தூங்காமல் விழித்தபடி பேசிக்கொண்டு இருந்தனர்.

இடிந்து விழுந்தது

அப்போது நள்ளிரவில் திடீரென அவர்களது வீடு இடிந்து விழுந்தது. முன்னதாக ஓடுகள் விழும் சத்தம் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த கணவன்-மனைவி இருவரும் அலறி அடித்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தனர்.

இதனால் லேசான காயத்துடன் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்