பா.ஜனதா ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ. கீதா ஜெயின் சிவசேனாவில் இணைந்தார்
பா.ஜனதா ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ. கீதா ஜெயின் சிவசேனாவில் இணைந்தார்.
மும்பை,
மிரா பயந்தரில் செல்வாக்கு பெற்ற பா.ஜனதா தலைவராக இருந்தவர் கீதா ஜெயின். கடந்த சட்டமன்ற தேர்தலில் இவருக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர் மிரா பயந்தர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பின்னர் தனது ஆதரவை பா.ஜனதாவுக்கு தெரிவித்து இருந்தார்.
சிவசேனாவில் இணைந்தார்
இந்தநிலையில் கீதா ஜெயின் நேற்று பாந்திராவில் உள்ள மாதோஸ்ரீ இல்லத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனாவில் இணைந்தார்.
அவருடன் தானே மாவட்ட பொறுப்பு மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் தானே எம்.எல்.ஏ. பிரதாப் சார்னிக் ஆகியோர் இருந்தனர். நேற்று முன்தினம் பா.ஜனதா மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே தேசியவாத காங்கிரசில் இணைந்தார். இந்தநிலையில் பா.ஜனதா ஆதரவு எம்.எல்.ஏ. ஒருவரும் அந்த கட்சியில் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்து உள்ளது அக்கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.