ஊரடங்கை மீறியதாக முன்னாள் மந்திரி பங்கஜா முண்டே மீது வழக்குப்பதிவு

ஊரடங்கை மீறியதாக முன்னாள் மந்திரி பங்கஜா முண்டே மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Update: 2020-10-28 01:24 GMT
மும்பை, 

பீட் மாவட்டம் சுவர்காவ் பகுதியில் உள்ள பகவான் பக்தி காட்டிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்னாள் பெண்கள் நலத்துறை மந்திரி பங்கஜா முண்டே சென்று இருந்தார். அங்கு நடந்த தசரா பொதுக்கூட்டத்தில் அவர் ஆன்லைன் மூலம் உரையாற்றினார். ஆனாலும் கூட்டத்தில் அவருடன் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியினர் அதிகளவில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறியதாக பங்கஜா முண்டே, பாக்வத் காரட் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மோனிகா ராஜலே, மேகனா போர்திகர் மற்றும் கட்சியினர் 40 முதல் 50 பேர் மீது அமலனர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

அனுமதி பெற்றேன்

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவா் கூறுகையில், “மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தற்போது 5 பேர் கூடுவதற்கு மட்டுமே அனுமதி உள்ளது. எனவே தான் வழக்குப்பதிவு செய்து உள்ளோம்” என்றார்.

இதற்கு பதில் அளித்து உள்ள பங்கஜா முண்டே, “உரிய அனுமதி பெற்று தான் பாக்வன் பக்திக்கு சென்றேன். ஆனாலும் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என குற்றம்சாட்டி உள்ளார்.

மேலும் செய்திகள்