மும்பையில் இன்று முதல் கூடுதலாக 610 மின்சார ரெயில் சேவைகள் அறிவிப்பு

மும்பையில் இன்று முதல் கூடுதலாக 610 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.

Update: 2020-11-01 10:47 GMT
மும்பை, 

மும்பையில் தற்போது அத்தியாவசிய பணியாளர்கள், பெண்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்காக மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே குறிப்பிட்ட நேரங்களில் பொது மக்களையும் மின்சார ரெயில்களில் அனுமதிக்க வேண்டும் என மாநில அரசு, ரெயில்வே நிர்வாகத்திற்கு கடிதம் எழுதி உள்ளது. ஆனால் அதுகுறித்து ரெயில்வே இன்னும் முடிவை அறிவிக்கவில்லை.

இந்தநிலையில் மும்பையில் இயக்கப்பட்டு வரும் மின்சார ரெயில்களின் எண்ணிக்கையை மத்திய, மேற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.

இதுகுறித்து மத்திய, மேற்கு ரெயில்வே கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தற்போது மும்பையில் மத்திய ரெயில்வே சார்பில் 706 ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று (ஞாயிறு) முதல் அங்கு கூடுதலாக 314 ரெயில் சேவைகள் இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் மத்திய ரெயில்வேயில் 1, 020 ரெயில் சேவைகள் இயக்கப்படும். இதேபோல மேற்கு ரெயில்வேயில் தற்போது இயக்கப்பட்டு வரும் 704 -வுடன் கூடுதலாக 296 சேவைகளையும் சேர்த்து 1, 000 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட உள்ளது.

இன்று முதல் மத்திய, மேற்கு ரெயில்வேயில் கூடுதலான 610 சேவைகளுடன் சேர்த்து மொத்தம் 2, 020 ரெயில் சேவைகள் இயக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் மும்பையில் விரைவில் பொது மக்களும் மின்சார ரெயில்களில் அனுமதிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு பயணிகள் இடையே ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்