மறைமலைநகர் அருகே பயங்கரம்: துரித உணவு கடை உரிமையாளர் தலையில் கல்லை போட்டு கொலை

மறைமலை நகர் அருகே துரித உணவு கடை உரிமையாளர் தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு 4 பேர் கொண்ட கும்பல் தப்பிச்சென்றது.

Update: 2020-11-03 02:10 GMT
வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த கீழக்கரணை பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் தேவபிரகாஷ் (வயது 27). இவர் மறைமலைநகர் பகுதியில் துரித உணவு கடை வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இவரது வீட்டின் அருகே நண்பர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் தேவப்பிரகாஷ் தலையில் கல்லைப் போட்டு தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த தேவபிரகாஷ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துசம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

4 பேரிடம் விசாரணை

இது குறித்த தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேவபிரகாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கீழக்கரணை பகுதியை சேர்ந்த 4 பேரை பிடித்து அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொலை முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா? அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக நடந்ததா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்