ரெயில் நிலைய பொறியாளர் அலுவலக பெயர் பலகையில் தமிழ் முதல் இடம் பெற்றது

சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பை தொடர்ந்து திருவாரூர் ரெயில் நிலைய பொறியாளர் அலுவலக பெயர்பலகையில் தமிழ் முதல் இடம் பெற்றது.

Update: 2020-11-05 01:36 GMT
திருவாரூர், 

திருவாரூர் ரெயில் நிலைய வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட ரெயில்வே பொறியாளர் அலுவலகத்தில் பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த மாதம் முதல் வாரத்தில் அலுவலக பெயர் பலகையில் தமிழ் பெயரை புறக்கணித்து இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பெயர் எழுதப்பட்டிருந்தது. இதைக்கண்ட திருவாரூர் பகுதி சமூக ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தனர்.

தமிழில் எழுதினர்

இதைத்தொடர்ந்து ரெயில் நிலைய அதிகாரிகள் உடனடியாக பெயர் பலகையில் இருந்த இந்தி, ஆங்கில பெயர்களை அழித்தனர். பின்னர் நமது தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் முதல் இடத்தில் அலுவலக பெயரை தமிழில் எழுதி உள்ளனர். இதன் கீழ் இந்தி, ஆங்கில மொழிகள் இடம் பெற்று உள்ளன. பெயர் பலகையில் தமிழுக்கு முதல் இடம் கிடைத்து உள்ளதால் திருவாரூர் பகுதி சமூக ஆர்வலர்கள் ரெயில்வே துறைக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்