ரஜினி அரசியலுக்கு வரவேண்டி சுவரொட்டிகள் திருப்பூர் மாநகரில் பரபரப்பு

திருப்பூர் மாநகரில் ரஜினி அரசியலுக்கு வர அழைப்பு விடுத்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-11-05 06:03 GMT
திருப்பூர், 

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் தீவிரமாக எதிர்பார்த்து வருகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளாக நடிகர் ரஜினிகாந்தும் அவர் அறிக்கையின் மூலமாக அரசியலுக்கு வருவதற்கான அறிவிப்பை வெளியிட்டு வருகிறார். இதனால் வருகிற சட்டமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பெருகி வந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்தும், அரசியல் நிலைப்பாடு குறித்தும் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. அதன் பிறகு ரஜினிகாந்த் தனது அறிக்கை மூலம் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

சுவரொட்டிகள்

இந்த நிலையில் திருப்பூர் மாநகரில் ரெயில் நிலையம், பஸ் நிலையம், காலேஜ் ரோடு, ஜெய்வாபாய் பள்ளி வீதி உள்பட பல பகுதிகளில் நடிகர் ரஜினிகாந்த் படத்துடன் சுவரொட்டிகள் நேற்று ஒட்டப்பட்டுள்ளது.

அதில் ‘தேசம் காக்க வா தலைவா, தமிழ் தேசம் காக்க வா தலைவா, ஓட்டுன்னு போட்டா தலைவர் ரஜினிக்கு தான், வா தலைவா வா, தமிழகத்தில் மாற்றத்தை எதிர் நோக்கும் திருப்பூர் மக்கள்‘ என்று குறிப்பிட்டு மாநகரின் பல பகுதிகளில் நேற்று இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. அமைப்பின் பெயரோ அல்லது அவரது ரசிகர்கள் பெயர் உள்ளிட்ட எந்த விவரமும் குறிப்பிடாமல் இருந்தது. இது திருப்பூர் பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்