சுரண்டை அருகே மினி லாரியில் கடத்திய 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவர் கைது
சுரண்டை அருகே மினி லாரியில் கடத்திய 2½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து, டிரைவரை கைது செய்தனர்.
சுரண்டை,
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சாம்பவர் வடகரை பகுதியில் நேற்று முன்தினம் வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, சாம்பவர் வடகரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில் போலீசார் அந்த பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை போலீசார் வழிமறித்து சோதனை நடத்தினர். அப்போது அந்த மினி லாரியில் 50 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது. அந்த மூட்டைகள் தலா 50 கிலோ எடை கொண்டதாக இருந்தது. இதையடுத்து மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
டிரைவர் கைது
இதுதொடர்பாக மினி லாரி டிரைவரான சாம்பவர் வடகரையைச் சேர்ந்த ஜெயச்சந்திரனை (வயது 42) போலீசார் கைது செய்தனர்.
மினி லாரியில் இருந்த 2½ டன் ரேஷன் அரிசியை நெல்லை நுகர்பொருள் வாணிப கிடங்கில் போலீசார் ஒப்படைத்தனர்.