கந்தம்பாளையம் அருகே பாய்லர் வெடித்த விபத்தில் மேலும் ஒரு தொழிலாளி சாவு

கந்தம்பாளையம் அருகே பாய்லர் வெடித்த விபத்தில் மேலும் ஒரு தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2020-11-12 15:51 GMT
கந்தம்பாளையம், 

கந்தம்பாளையம் அருகே நல்லூரில் பழைய இரும்புகளை உருக்கி இரும்பு கம்பிகள் தயாரிக்கும் இரும்பு ஆலை உள்ளது. இங்கு கடந்த 30-ந் தேதி பழைய இரும்புகளை உருக்கும் பணி நடைபெற்றபோது எதிர்பாராத வகையில் திடீரென மிகுந்த சத்தத்துடன் பாய்லர் வெடித்தது. அப்போது அதன் அருகே வேலை செய்து கொண்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் உள்பட 9 பேர் காயமடைந்தனர். அவர்களில் கவுண்டிபாளையம் அருந்ததியர் காலனியை சேர்ந்த முருகேசன் மகன் பிரவீன் குமார் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்தநிலையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரின்ஸ் ராய் (வயது 26) என்பவரும் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் இந்த சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்