கோவை, திருப்பூர் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகளுடன் உதயநிதி ஸ்டாலின் நேர்காணல்

கோவை, திருப்பூர் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகளுடன் உதயநிதி ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார்.

Update: 2020-11-14 22:25 GMT
கோவை, 

கோவை மாநகர் கிழக்கு, மேற்கு, புறநகர் வடக்கு, தெற்கு, கிழக்கு, திருப்பூர் மாநகர், கிழக்கு, வடக்கு, தெற்கு ஆகிய 9 மாவட்ட தி.மு.க. இளைஞர் அணியில் அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கான நேர்காணல் கோவை கிராஸ்கட் ரோட்டில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது.

இதில், தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி, நேர்காணலில் பங்கேற்றவர்களுடன் கலந்துரையாடினார். இளைஞர் அணி நிர்வாகியாக நியமனம் செய்வதற்கான தகுதி உள்ளதா? என ஆய்வு செய்தார். இந்த நேர்காணலில், சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக தி.மு.க. இளைஞர் அணியின் செயல்பாடு மற்றும் கடந்த கால வரலாறு தொடர்பாக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சிகளில், மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள் பைந்தமிழ்பாரி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முகமது அலி ஜின்னா, கோவை மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்கள் கார்த்திக் எம்.எல்.ஏ., (கோவை மாநகர் கிழக்கு), பையா கவுண்டர் (கோவை மாநகர் மேற்கு), சி.ஆர்.ராமச்சந்திரன் (கோவை புறநகர் வடக்கு), திருப்பூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்கள் மு.பெ.சாமிநாதன் (திருப்பூர் கிழக்கு), செல்வராஜ் (திருப்பூர் மாநகர்), பத்மநாபன் (திருப்பூர் வடக்கு), ஜெயராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. (திருப்பூர் தெற்கு) மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, பெரிய கடை வீதி பகுதியில் கலைஞர் நற்பணி மன்றத்தின் பொருளாளராக இருந்து மறைந்த மோகன்ராஜின் குடும்பத்தினருக்கு, பகுதி கழக பொறுப்பாளர் மார்க்கெட் மனோகரன் தலைமையில், ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அதன்பின்னர் நேற்று மாலை 4.30 மணியளவில் கோவையிலிருந்து விமானம் மூலம் உதயநிதி ஸ்டாலின் சென்னை புறப்பட்டு சென்றார்.

மேலும் செய்திகள்