பேய்க்குளம் மகேந்திரன் இறந்த வழக்கு: உறவினர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் விசாரணை

பேய்க்குளம் மகேந்திரன் இறந்த வழக்கில் அவருடைய உறவினர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று மீண்டும் விசாரணை நடத்தினர். அப்போது 6 பேரின் வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டனர்.

Update: 2020-11-18 17:27 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளத்தை சேர்ந்தவர் மந்திரம். இவருடைய மகன் மகேந்திரன் (வயது 28).

இவரை ஒரு கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் போலீசார் கடந்த மே மாதம் 23-ந் தேதி விசாரணைக்கு அழைத்து சென்றனர். விசாரணைக்கு பிறகு மறுநாள் விடுவிக்கப்பட்ட மகேந்திரன் ஜூன் 11-ந் தேதி திடீரென உயிரிழந்தார்.

ஐகோர்ட்டு உத்தரவு

இந்த நிலையில் போலீசார் கடுமையாக தாக்கியதால் தான் மகேந்திரன் இறந்ததாக கூறி அவருடைய தாயார் வடிவு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, அதுகுறித்து வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது.

அதன்படி சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

மீண்டும் விசாரணை

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சில சாட்சிகளிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டி இருந்ததால் சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் தலைமையிலான போலீசார் நேற்று பேய்க்குளத்துக்கு சென்றனர்.

அங்கு மகேந்திரனின் தாயார் வடிவு, சகோதரி சந்தனமாரி உள்பட உறவினர்கள் 6 பேரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். அவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டனர்.

வியாபாரி கொலை வழக்கு

இதேபோன்று சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கன்குடியிருப்பை சேர்ந்த வியாபாரி செல்வன் (32) என்பவர் கடந்த செப்டம்பர் மாதம் 17-ந் தேதி காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் அ.தி.மு.க. பிரமுகர் திருமணவேல் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் மேலும் சில சாட்சிகளிடம் விசாரணை நடத்துவதற்காக சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் மற்றும் போலீசார் சொக்கன்குடியிருப்பு, கொம்மடிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றனர். அங்கு வழக்கில் தேவையான சாட்சிகளிடம் விசாரணை நடத்தினர். நேற்று இரவு வரை இந்த விசாரணை நடந்தது. 

மேலும் செய்திகள்