விருத்தாசலம் அருகே வாலிபர் அடித்துக் கொலை நண்பர்கள் 2 பேர் கைது

விருத்தாசலம் அருகே வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு.

Update: 2020-11-20 05:36 GMT
விருத்தாசலம், 

விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சி ஜே.ஜே. நகரை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் சூர்யா (வயது 25), தொழிலாளி. இவரும் அதே பகுதியை சேர்ந்த கருணாநிதி மகன் வினோத்குமார் (26), நேமம் பகுதியை சேர்ந்த அன்பழகன் மகன் ராஜேந்திரன்(33) ஆகியோரும் நண்பர்கள் ஆவர்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி வினோத்குமார், சூர்யாவின் சித்திக்கு சேலை வாங்க பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த சூர்யா, கடந்த 17-ந் தேதி தனது நண்பர் வினோத்குமாரின் வீட்டிற்கு சென்றார். பின்னர் அங்கிருந்த அவரது தாயாரிடம், எனது சித்தப்பா குடும்பத்தினருடன் வினோத்குமார் தேவையில்லாமல் பிரச்சினை செய்து வருகிறார். அதனால் வினோத்குமாரை கண்டித்து வையுங்கள் என கூறிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டார்.

இது குறித்து வினோத்குமாரிடம் அவரது தாயார் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர், சூர்யாவின் சித்தப்பா வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கிருந்த சூர்யாவிற்கும், வினோத்குமாருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மேலும் ஆத்திரமடைந்த வினோத்குமார், ராஜேந்திரனுடன் சேர்ந்து கொண்டு சூர்யாவை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை சூர்யா பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்குமார், ராஜேந்திரன் ஆகியோரை கைது செய்தனர். வாலிபரை அவரது நண்பர்களே அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்