வேறொருவருடன் திருமணம் செய்து வைத்ததால் காதலனுடன் புதுப்பெண் குளத்தில் குதித்து தற்கொலை

பங்காருபேட்டை அருகே வேறொருவருடன் திருமணம் செய்து வைத்ததால் மனவேதனை அடைந்த புதுப்பெண், காதலனுடன் குளத்தில் குதித்து தற்கொலை செய்த சோக சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2020-11-20 22:28 GMT
கோலார் தங்கவயல்,

கோலார் மாவட்டம் பங்காருபேட்டை தாலுகா முகிலபாலே கிராமத்தில் ஒரு குளம் உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை அந்த குளத்தில் ஒரு வாலிபர் மற்றும் ஒரு இளம்பெண்ணின் பிணங்கள் மிதந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் உடனே பங்காருபேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன், வாலிபர், இளம்பெண் ஆகியோரின் பிணங்கள் மீட்கப்பட்டன. அதன்பிறகு பிரேதப் பரிசோதனைக்காக 2 பேரின் உடல்களும் பங்காருபேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. பிணமாக கிடந்தவர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் முதலில் அவர்கள் யார் என்பது தெரியாமல் இருந்தது. போலீசாரின் தீவிர விசாரணையில் பிணமாக கிடந்தவர்கள் பற்றி அடையாளம் தெரியவந்தது.

வேறொருவருடன் திருமணம்

அதாவது பிணமாக கிடந்தவர்கள், பங்காருபேட்டை அருகே மாட மங்களா கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 28), காரஹள்ளி கிராமத்தை சேர்ந்த ரூபா (26) என்பதும், இவர்கள் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். ஆனால் இந்த காதலுக்கு ரூபாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். மேலும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரூபாவை அவரது பெற்றோர் வேறொரு வாலிபருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத ரூபா, காதலனுடன் சேர்ந்து வாழ முடியவில்லையே என்ற மனவேதனையில் இருந்து வந்துள்ளார். அதுபோல் தனது காதலியை வேறொருவருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்துவிட்டனரே என சுரேசும் வாழ்க்கையில் விரக்தி அடைந்து காணப்பட்டார்.

குளத்தில் குதித்து தற்கொலை

இதற்கிடையே இருவரும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். வாழ்க்கையில் தான் ஒன்று சேர முடியவில்லை. எனவே இருவரும் ஒன்றாக சாவோம் என்று முடிவு செய்துள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் ரூபா தனது கணவர் வீட்டில் இருந்து வெளியேறி, காதலன் சுரேசுடன் முகிலபாலே கிராமத்திற்கு வந்துள்ளார். பின்னர் இருவரும் அங்குள்ள குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

பெரும் சோகம்

இதுதொடர்பாக பங்காருபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வேறொருவருடன் திருமணம் செய்து வைத்ததால் புதுப்பெண், காதலனுடன் தற்கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்