ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2020-11-21 00:10 GMT
தென்காசி, 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, கடந்த மாதம் (அக்டோபர்) 26-ந் தேதி நெல்லை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சிவசுப்பு, சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் போஸ் மற்றும் போலீசார் பனவடலிசத்திரம் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை சோதனை செய்தபோது, அதில் ரேஷன் அரிசி இருந்ததும், அதை கேரளாவுக்கு கடத்தி செல்வதும் தெரியவந்தது. இதுதொடர்பாக சங்கரன்கோவில் தாலுகா ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்த செல்லையா என்ற குட்டியான் (வயது 51), செந்தட்டி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த வேலுச்சாமி (47) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் 10 டன் ரேஷன் அரிசியுடன் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 2 பேரும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

குண்டர் சட்டம்

இந்த நிலையில் செல்லையா, வேலுச்சாமி ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, மதுரை மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், துணை சூப்பிரண்டு இளங்கோவன் ஆகியோரின் அறிவுரைப்படி இன்ஸ்பெக்டர் சிவசுப்பு மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் சமீரன், அவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகலை போலீசார் பாளையங்கோட்டை சிறையில் சமர்ப்பித்தனர்.

மேலும் செய்திகள்