6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை - புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு

6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2020-11-21 05:01 GMT
புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாங்குடி பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 66). இவர் அறந்தாங்கி அருகே கடந்த 2019-ம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். இது தொடர்பாக அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கருப்பையாவை கைது செய்து சிறையில் அடைந்தனர். மேலும் இது தொடர்பான வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டாக்டர் சத்யா நேற்று தீர்ப்பளித்தார். இதில் கருப்பையாவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராத தொகையாக ரூ.10 ஆயிரமும் விதிக்கப்பட்டது. மேலும் அபராத தொகை செலுத்த தவறினால் மேலும் 3 மாதம் கடுங்காவல் சிறைதண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

இதைத்தொடர்ந்து கருப்பையாவை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரணமாக ரூ.3½ லட்சம் அரசு சார்பில் வழங்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் அங்கவி வாதாடினார்.

இந்த வழக்கில் திறம்பட புலன்விசாரணை செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுரி மற்றும் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜிசரவணன் பாராட்டினார்.

மேலும் செய்திகள்