பழவந்தாங்கலில் சோகம் மகன் இறந்த துக்கம் தாங்காமல் தாய் தற்கொலை

மகன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2020-11-21 22:30 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பழவந்தாங்கல் பி.வி.நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவருடைய மனைவி ரமணி (வயது 72). இவர், மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருக்கு ராம்பிரபு (32) என்ற மகனும், பிரியா என்ற மகளும் உள்ளனர்.

தட்சிணாமூர்த்தி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். ரமணி, திருமணம் ஆகாத தனது மகன் ராம்பிரபுவுடன் வசித்து வந்தார்.

சாப்ட்வேர் என்ஜினீயரான ராம்பிரபு, சென்னையில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த ஓராண்டுக்கு முன்பு ராம்பிரபு, தென் அமெரிக்காவில் பணியாற்றினார். அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதன்பிறகு சென்னை திரும்பி வந்த அவர், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். வேளச்சேரியில் உள்ள ஆஸ்பத்திரியில் இருதயத்தில் இருந்த கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த ராம்பிரபு, அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை பரிதாபமாக இறந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரமணி, தனது மகன் இறந்த துக்கம் தாங்காமல் வீட்டில் உள்ள தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி பழவந்தாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்த ரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். மகன் இறந்த துக்கம் தாங்காமல் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பழவந்தாங்கல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்