தீவிரவாதிகள் தாக்குதலை முறியடிக்க போலீசாருக்கு பயிற்சி

தீவிரவாதிகளின் தாக்குதலை முறியடிப்பது தொடர்பாக போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2020-11-21 22:45 GMT
புதுச்சேரி,

நாடு முழுவதும் சட்டமன்றம், கவர்னர் மாளிகை, தலைமைச் செயலகம், தூதரகங்களின் பாதுகாப்பினை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் அதை சமாளிப்பது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமையின் தென்மண்டல மேஜர் ராஜேஷ் தலைமையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் சட்டசபை வளாகத்துக்கு வந்து சட்டசபை காவலர்கள் செயல்பட வேண்டிய விதம் குறித்து அவர் விளக்கமளித்தார்.

இந்தநிலையில் தீவிரவாதிகள் தாக்குதலை முறியடிப்பது தொடர்பாக ஐ.ஆர்.பி. துணை கமாண்டன்ட் செந்தில்குமரன் நேற்று கமாண்டோ பயிற்சி முடித்த போலீசாருக்கு பயிற்சி அளித்தார். புதுவை சட்டசபை வளாகம், தலைமை செயலகம் உள்ளிட்ட பகுதிகளில் அவர்கள் பயிற்சி மேற்கொண்டனர்.

நாளை (திங்கட்கிழமை) சட்டசபையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் அதை முறியடிப்பது எப்படி? என்பது தொடர்பான ஒத்திகை நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்