மங்கலம் அருகே அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த 5 பேர் கைது

மங்கலம் அருகே அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-11-22 16:20 GMT
மங்கலம், 

திருப்பூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு சோமனூர் நோக்கி (தடம் எண்-5) என்ற அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் மங்கலத்தை அடுத்த வி.அய்யம்பாளையம் சைசிங் பஸ்நிறுத்தம் அருகே சென்றது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் பஸ்சின் முன்புற கண்ணாடி மீது கற்களை வீசி எறிந்தனர்.

இதில் பஸ்சின் முன்புற கண்ணாடி உடைந்தது.இதனால் பஸ்சில் இருந்த ஓட்டுனர், நடத்துனர், பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர், இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின்னர் பஸ்சில் வந்த பயணிகள் மற்றொரு பஸ்மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர். பின்னர் இது குறித்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

5 பேர் கைது

விசாரணையில் சம்பவத்தன்று இரவு 7.30 மணிக்கு மங்கலம் -சத்யாநகர் பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது 25), பூமலூர் பகுதியை சேர்ந்த சரத்குமார் (26), பெரியாண்டிபாளையம் பகுதியை சேர்ந்த பாண்டி (48) ஆகிய 3 பேரும் மங்கலத்தை அடுத்த நீலிப்பிரிவு பஸ்நிறுத்தம் பகுதியில் திருப்பூரில் இருந்து சோமனூர் நோக்கி வந்த அந்த பஸ்சில் மங்கலம் செல்ல ஏறியுள்ளனர். அப்போது அந்த 3 பேருக்கும் அரசு பஸ் நடத்துனருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.பின்னர் அந்த 3 பேரையும் பஸ்சில் இருந்து நடத்துனர் இறக்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் அவரின் நண்பர்களான திருப்பூர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (29), மற்றும் மங்கலம் பகுதியைச் சேர்ந்த முகமது (23) ஆகியோரை தொடர்பு கொண்டு இதுபற்றி செல்போனில் தெரிவித்துள்ளார்.

பின்னர் ஒரு மோட்டார் சைக்கிளில சதீஷ், பாலமுருகன், முகமது ஆகிய 3பேரும் பஸ்சை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். பின்னர் அரசுபஸ் மங்கலத்தை அடுத்த வி.அய்யம்பாளையம்-சைசிங் பஸ்நிறுத்தம் பகுதியில் சென்ற போது சதீசை மோட்டார் சைக்கிளில் இருந்து இறக்கிவிட்டுள்ளனர். பாலமுருகன் மற்றும் முகமது ஆகியோர் அரசு பஸ் கண்ணாடி மீது கற்களை பஸ்வீசியுள்ளனர். இதில் பஸ்சீன் முன்புற கண்ணாடி உடைந்தது. இவ்வாறு மங்கலம் போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்த மங்கலம் போலீசார் 5 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்