மினி சரக்கு வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து 3 வயது குழந்தை பலி

மினி சரக்கு வாகனம் மோதியதில் மோட்டார்சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி விழுந்த 3 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

Update: 2020-11-23 23:17 GMT
தாம்பரம், 

சென்னை தாம்பரம் அடுத்த புதுபெருங்களத்தூர், குண்டுமேடு, கார்த்திகேயன் நகரைச் சேர்ந்தவர் முரளி(வயது 38). இவருக்கு 3 வயதில் சிவலிங்கம் என்ற ஆண் குழந்தை இருந்தது.

நேற்று காலை முரளி தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் வெளியே நிறுத்திவிட்டு, கதவை பூட்டுவதற்காக சென்று விட்டார். அவரது குழந்தை சிவலிங்கம், மோட்டார் சைக்கிளின் மீது ஏறி அமர்ந்து விளையாடி கொண்டிருந்தான்.

கீழே விழுந்து பலி

அப்போது அந்த வழியாக வந்த மினி சரக்கு வாகனம், மோட்டார்சைக்கிள் மீது லேசாக உரசியது. இதில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது. இதனால் மோட்டார்சைக்கிளில் நின்று விளையாடிக்கொண்டிருந்த சிவலிங்கம் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தான்.

இதனால் அதிர்ச்சி அடைந்த முரளி, உடனடியாக தனது குழந்தையை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கிச்சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மகனின் உடலை பார்த்து முரளி, அவருடைய மனைவி ஆகியோர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுபற்றி குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி சரக்கு வேன் டிரைவரான அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (37) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்