நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 102 ஆக உயர்வு

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு பெண் ஒருவர் பலியானதை தொடர்ந்து, இதுவரை பலியான நபர்களின் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்து உள்ளது.

Update: 2020-11-25 10:21 GMT
நாமக்கல், 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த 42 வயது பெண்ணுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்த்தனர். அங்கு அவருக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த அந்த பெண் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்து உள்ளது.

10,225 பேர் பாதிப்பு

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 10,180 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 7 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,187 ஆக அதிகரித்தது.

இதற்கிடையே நேற்று தேங்கல்பாளையம் அரசு பள்ளி ஆசிரியர், குருசாமிபாளையம் நடுநிலைப்பள்ளி ஆசிரியை உள்பட ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,225 ஆக உயர்ந்து உள்ளது. இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 45 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 9,875 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 102 பேர் பலியான நிலையில், 248 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்